Friday, February 3, 2017

எறும்பின் குற்றம்..!



எங்கு நோக்கினும் பொய். எல்லா இடங்களிலும் பொய். பொய் ஒரு குற்றமே அல்ல எனும் மனோபாவம் சமூகத்தின் அடிமனதில் கள்ளத்தனமாக உறைந்து கிடக்கிறது.

இதயங்களின் மருத்துவர் என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா என்ற நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்...

ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தில் இருந்து ஓர் எறும்பு நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்தது. அங்கே இறந்துபோன ஒரு வெட்டுக்கிளியின் இறக்கை கிடந்தது.

அதைத் தூக்கிச் செல்வதற்காக பல முறை அந்த எறும்பு முயன்றது .கனமாக இருந்ததால் முடியவில்லை. உடனே அது தன்னுடைய வசிப்பிடத்தை நோக்கி வேகமாக திரும்பிச் சென்றது. சற்று நேரத்தில் எறும்புப் படையே வரிசையாக வந்தது. அவை அந்த இறக்கைக்கு அருகே வந்ததும் நான் அந்த இறக்கையை கையால் உயர்த்தினேன். அவை தேடின. கிடைக்காதபோது திரும்பிவிட்டன. ஆனால் அந்த முதல் எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. (அதுதான் முதல் எறும்பாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது). உடனே நான் அந்த இறக்கையை போட்டேன். அந்த எறும்பு மீண்டும் தூக்க முயற்சித்தது. முடியவில்லை. மீண்டும் தன் படைகளை கூட்டி வர சென்றது.

முதல் முறையைவிட குறைவான எறும்புக் கூட்டம் வந்தது. அருகில் வந்ததும் மீண்டும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன். அவை தேடின. கிடக்காதபோது திரும்பின. அந்த ஒற்றை எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. நான் மீண்டும் அந்த இறக்கையைப் போட்டேன். மூன்றாம முறையும் அது தனது படையை அழைக்கச் சென்றது. முதல் இரண்டு முறையைவிட குறைவாக எண்ணிக்கையில் கொஞ்சம் எறும்புகள் வெளியே வந்தன. இப்போதும் நான் அந்த இறைக்கையை உயர்த்தினேன்.

அப்போதுதான் ஆச்சரியமான ஒரு செயலைப் பார்த்தேன். அந்த எறும்புக் கூட்டம் கோபம் கொண்டன. தங்களை ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஒற்றை எறும்பை சூழ்ந்துகொண்டு அதன் கை கால்களை முறித்தன. பின்னர் வயிற்றைக் கிழித்து துண்டு துண்டாக உடைத்துப் போட்டன.(லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்)
அந்த எறும்பு இறந்தது. உடனே நான் அந்த இறக்கையை மீண்டும் போட்டேன். அதைப் பார்த்த ஏனைய எறும்புகள் கைசேதப்பட்டன.ஆயினும் காலம் கடந்துவிட்டது.

உடனே அங்கிருந்து எழுந்து சென்று எனது ஆசிரியர் இப்னு தைமிய்யா அவர்களிடம் விவரத்தைக் கூறினேன். அவர் சொன்னார்: ”அல்லாஹ் உனது பாவங்களை மன்னிக்கட்டும்! மீண்டும் இவ்வாறு செய்யாதே! பொய் உரைப்பதை பெரும் பாவம் என்று எறும்புகள் கருதுகின்றன. அல்லாஹ்வின் படைப்பில் ஆச்சரியப் படைப்பு இந்த எறும்புகள். பொய் உரைத்தால் அதற்கு என்ன தண்டனை என்று எறும்புகளுக்குக் கற்றுக்கொடுத்த அல்லாஹ் ஆச்சரியமானவன்..! பொய் உரைப்பது பெரும் தவறு எனும் சிந்தனை எறும்புகளின் உணர்வுகளுடன் கலந்துள்ளது”.

ஆயினும் மனிதர்கள்...? இங்கு பலர் பொய்யை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை...! மறுமையில் காத்திருக்கும் தண்டனைகள்தான் எவையோ..? யார் அறிவார்..?

No comments :

Post a Comment

Theme images by Jason Morrow. Powered by Blogger.